ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர்
பெண்ணாகரம்: தர்மபுரி மாவட்டத்தில் தங்களது மகனை அடித்த ஆசிரியரை, மாணவரின் பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ளது ஏரியூர் அண்ணா நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாது, கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னதங்கம். இந்த தம்பதிகளின் மகன் ரமேஷ் (15)
இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என தெரிகிறது. நேற்று ரமேஷ் பள்ளிக்கூடம் வந்தான். அப்போது அறிவியல் ஆசிரியர் அப்பாதுரை என்பவர் மாணவனிடம், ஏன் பள்ளிக்கு சரியாக வரவில்லை' என்று கூறி அவனை அடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து வீடு சென்ற ரமேஷ், தனது ஆசிரியர் தன்னை அடித்து விட்டதாக பெற்றோரிடம் கூறினான். மேலும் மயக்கம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாது, அவரது மனைவி சின்னதங்கம் ஆகியோர் பள்ளிக்கூடம் சென்றனர். ஆசிரியர் அப்பாத்துரையிடம், ஏன் மகனை அடித்தீர்கள் என்று கூறி செருப்பால் ஆசிரியரை தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர் அப்பாத்துரை ஏரியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தன்னை மாது, சின்னதங்கம் ஆகியோர் தாக்கி விட்டதாக கூறி உள்ளார்.
அதுபோல ஆசிரியர் அப்பாத்துரை மீது மாதுவும் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பையும் போலீஸார் விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாதுவும், சின்ன தங்கமும் மாயமாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications