பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டார் ஆதரவு: அமர்சிங்
டெல்லி: தேர்தலுக்குப் பின்னர் சரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை ஆதரிப்போம் என சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற சமாஜ்வாடி கட்சி இப்போது தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோனியா காந்திக்கு கடுப்பேற்றும் வகையில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமர்சிங் பேச ஆரம்பித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால் அவரை முழுமையாக ஆதரிப்போம். அதேபோல முலாயம்சிங் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால் அதை பவாரும் ஆதரிப்பார் என கூறி குட்டையைக் குழப்பியுள்ளார் அமர்சிங்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அமர் சிங் அளித்துள்ள பேட்டியில், கடந்த தேர்தலில் நாங்கள் வென்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால்தான் கூட்டணி ஏற்படாமல் போக முக்கிய காரணம்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நான் சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சரத் பவார் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர். அவர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். மாறாக முழுமையாக ஆதரிப்போம்.
அதேபோல, ஒருவேளை முலாயம் சிங் யாதவ் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை பவார் ஆதரிப்பார்.
நாங்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லை. அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற நேரிட்டது. தற்போது காங்கிரஸுடன் தொடர்புடைய மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் ஒரு தனி குழுவாக நாங்கள் இயங்கி வருகிறோம் என்றார் அமர் சிங்.












Click it and Unblock the Notifications