தேர்தல்..ஜாதகம் பார்த்து சீட் தரும் ஜெயலலிதா!
இதனால் விண்ணப்பப் படிவத்துடன் தங்களது ஜாதகத்தையும் இணைத்துள்ளனராம் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளர்கள்.
யாருக்கு 'நேரம்' சரியாக இருக்கிறதோ அவர்களுக்கே டிக்கெட் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'கட்டம்' சரியில்லாதவர்கள் கட்டம் கட்டி கழிக்கப்பட்டு விடுவார்களாம்.
ஜெயலலிதாவே ஜாதக நகல்களையும் விண்ணப்ப மனுவுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். இதனால்தான் சீட் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ள அதிமுகவினர் தங்களது ஜாகத்தையும் ஜெராக்ஸ் எடுத்து இணைத்துள்ளனராம்.
இந்த ஜாதகங்களைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 6 ஜோதிடர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் தான் ஜெயலலிதாவால் பரிசீலிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ள ராஜன் என்பவர் கூறுகையில், அம்மாவுக்கு ஜோதிடம் மீது அபார நம்பிக்கை உண்டு என்பதை அனைவருக்கும் தெரியும்.
இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. எனவே எந்த வகையிலும் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அம்மா கவனமாக இருக்கிறார்.
கிரக நிலைகள் சரியாக இருப்பவர்களுக்கே சீட் என்ற முடிவில் அம்மா இருப்பதாக அறிகிறோம். அதனால்தான் ஜாதக நகலையும் கேட்டுள்ளனர்.
பிறந்த தேதி, எந்த நேரத்தில் பிறந்தனர் என்பதையும் அம்மா முக்கியமாக கவனிக்கவுள்ளார். மற்ற தகுதியெல்லாம் அடுத்துதான் என்கிறார் ராஜன்.
பாபு என்பவர் கூறுகையில், இது உண்மையிலேயே நல்லதுதான். அம்மாவின் விருப்பமே எங்களது விருப்பமும். அவருடைய வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என்கிறார் ராஜன்.
விரைவில் விண்ணப்பம் தந்துள்ளோருடன் ஜெயலலிதா நேர்காணலில் ஈடுபடவுள்ளார். அதுவும் கூட நாள், நட்சத்திரம் பார்த்துதான் நடக்கும் என்கிறார்கள்.
இதில் எத்தனை பேர் ஜாதகத்தை 'சரி செய்து' தந்திருக்கிறார்களோ தெரியவில்லை.