கம்ப்யூட்டர் தேர்வு-விரக்தியில் டைப்பிஸ்டுகள்
மதுரை: கம்ப்யூட்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளதால், அரசு துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தட்டச்சர்கள், சுருக்கெழுத்துப் பணியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுப்பணி, கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் உள்பட 135 துறைகளில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 3,500 பேர் நிரந்தர ஊழியர்கள். 3,500 பேர் தற்காலிக ஊழியர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி தமிழ்நாடு அரசின் ஊழியர்-நிர்வாக சீர்திருத்தங்கள் துறையிலிருந்து வெளியிடப்பட்ட ஆணை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சுப் பணியாளர்களுக்கு கலக்கத்தையும், கவலையையும், ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி விரைவாகவும், இலகுவாகவும் நடைபெற தகவல் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவுத் திறனை ஏற்படுத்தவும், தட்டச்சு இயந்திரங்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர்களை வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வசதியாக, அலுவலக "ஆட்டோமேஷன்' பிரிவில் கணினிப் பயிற்சி பெற்று தொழிற்கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இத்தேர்வில் இரு ஆண்டுகளுக்குள் பங்கேற்று தேர்ச்சி பெற்றால்தான் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 வயது அல்லது 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சுப் பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ளனர். ஒரு மாதமோ அல்லது இரு மாதங்களோ போதிய கணினிப் பயிற்சி அளித்தாலே, அலுவலகப் பணிகளை கணினி மூலம் எளிதாக செய்துவிட முடியும். இதற்காக படித்து தேர்வு எழுதச் சொல்வது தேவையற்றது என்கின்றனர் பெண் தட்டச்சுப் பணியாளர்கள்.
3,500 தற்காலிக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி அரசிடம் தொடர்ந்து கோரி வருகிறோம். அவர்களை இதுபோன்ற தேர்வில் பங்கேற்கச் செய்யலாம். அவர்களும் இதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், அரசுப் பணிக் காலத்தில் அதிக வயதைக் கடந்து பணியாற்றும் ஊழியர்களை தேர்வு எழுதச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் முறையிட்டுள்ளோம் என்று தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணியாளர்கள் சங்க தலைமை நிலையச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.