For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை, திருச்சி: லஞ்சம் லஞ்சம்...ரெய்ட் ரெய்ட்..

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய ரெய்டில் ரூ.6 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் வாகன உதிரி பாகங்களுக்கு டெண்டர் வழங்குவதில் பெரும் லஞ்சம் கைமாற உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, நடராஜன் ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரவரதன், குமரகுருபரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலாண்மை இயக்குனர் ராமசுப்பிரமணியன் (55) அலுவலகம், அவரது கார் மற்றும் உதவியாளர் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.6 லட்சத்து 19 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இயக்குனர் ராமசுப்பிரமணியனின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் அவரது வங்கி கணக்கு புத்தகமும், மேலும் சில ஆவணங்களும் கிடைத்தன.

இவ்வளவு பணத்துக்கும் கணக்கு கேட்டு ராமசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது காண்டிராக்டர் மூலம் கிடைத்த லஞ்சப் பணம் என்று அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.

திருச்சி பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரெய்ட்...:

இதற்கிடையே திருச்சியில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2.4 லட்சம் லஞ்சப் சிக்கியது. இதையடுத்து 18 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம், உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 270ம், கண்டோன்மெண்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.66 ஆயிரத்து 725ம் சிக்கியது.
இந்த லஞ்ச பணத்தை அதிகாரிகளுக்கு வாங்கி கொடுப்பதற்கு உடந்தையாக இருந்ததாக உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தாளர்கள் மற்றும் புரோக்கர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ. 1.5 கோடி மோசடி-பெண் அதிகாரி கைது:

இதற்கிடையே அறிவொளி இயக்கத் திட்டத்தில் ரூ. 1.5 கோடி மோசடி செய்த நாமக்கல் மாவட்ட பெண் அதிகாரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட அறிவொளி இயக்கம் மற்றும் வளர்கல்வி திட்டத்தின் கீழ் 372 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திட்ட ஒருங்கிணைப்பாளராக பெல்லா சேகர் உள்ளார்.

சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பொறுப்பேற்றவுடன் அறிவொளி இயக்க பணியாளர்கள் சிலர் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என புகார் செய்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லோகேஷ்வரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

விசாரணையில் பொய்யான வவுச்சர்கள் தயார் செய்தும், மேலும் பல்வேறு முறைகேடுகள் மூலமும் ரூ. 1.5 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாமக்கல் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பெல்லா சேகரை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X