அதிமுக உண்ணாவிரத உண்டியல்கள் சென்னை வந்தன
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது வைக்கப்பட்ட உண்டியல்கள் சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திறகு வந்து சேர்ந்துள்ளன.
இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தத்தை வற்புறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்தின்போது உண்டியல் வைக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் போட்டு வசூலைத் தொடங்கி வைத்தார். அதேபோல மாநிலம் முழுவதும் உண்டியல்கள் வைத்து நிவாரணத் தொகை வசூலிக்கப்பட்டது.
ஜெயலலிதா தவிர மதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் தரப்பட்டது. இதுதவிர அதிமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு நேற்று பாதுகாப்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் உண்டியலை தலைமைக்கழக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் இன்று அல்லது நாளை சீல் உடைக்கப்பட்டு எண்ணப்படும் என்று தெரிகிறது.
உண்டியலில் உள்ள பணம் அனைத்தும் எண்ணப்பட்ட பின்பு முழு தொகையையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த தொகையை ஜெயலலிதா செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு விரைவில் அனுப்பிவைப்பார்.












Click it and Unblock the Notifications