3வது அணிக்கு பாமக நிச்சயம் வரும்: நல்லகண்ணு நம்பிக்கை
விழுப்புரம்: லோக்சபா தேர்தலில் பாமக நிச்சயம் 3வது அணியில்தான் இடம் பெறும். அந்த நம்பிக்கை உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பெண்ணாடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியா பல மொழி, பல அரசியல் கட்சிகளை கொண்ட பெரிய நாடு. 2 அரசியல் அணிகள் என்ற கொள்கை இந்திய ஜனநாயக அமைப்புக்கு ஒத்து வராது.
காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும், பல கட்சிகளை இணைத்து அல்லது அணி சேர்த்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாடு ஆகிவிட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இது உறுதியும் ஆகிவிட்டது. இந்த 2 கட்சிகளையும் நாட்டு மக்கள் பார்த்து விட்டனர். தற்போது 3-வது அணி உருவாகி வருகிறது.
இந்த அணி ஆட்சி அதிகாரம் என இல்லாமல் கொள்கை ரீதியாக நாட்டு நலன் கருதி அமையும். பா.ம.க.வும் இந்த அணிக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களும் நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றது. காங்கிரஸ் கட்சி கொடுத்திருந்த எந்த உறுதி மொழியையும் செயல்படுத்தவில்லை.
பாரதீய ஜனதா மதவாத கட்சியாக இயங்குகிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 2 கட்சிகளும் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படவில்லை. நாட்டு மக்களுக்காக பாடுபடும் ஓர் அணியாக 3-வது அணி அமையும்.
எங்கள் கட்சியை பற்றி கருணாநிதி சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி செய்ய தவறியவைகளையும், தவறுகளையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதை கருணாநிதி விரும்பவில்லை என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications