தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: தமிழத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் சற்று தெளிவாக காணப்படுகிறது.
இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. நேற்று காலை முதல் இது இலங்கை மற்றும் வட தமிழ்நாடு கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி நிலை கொண்டுள்ளது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்யலாம். இன்றைய நிலவரப்படி இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெயில் ..
சென்னையில் கடந்த 2 நாட்களாக இருந்து வந்த மப்பும் மந்தராமுமான நிலை சற்று மாறி லேசான வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது வானம் இருட்டி வருகிறது. இருப்பினும் இதுவரை மழை எதுவும் இல்லை.
நாகையில் விடுமுறை
டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.