மீண்டும் உதயமான 3வது அணி-ஜெ, மாயாவதி இணைந்தனர்
இந்த அணியில் ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கும் இணைகிறார் என்று இந்த அணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெ கெளடா கூறியிருந்தார்.
ஆனால், இந்த அணியில் இணைவது குறித்து நாங்கள் இன்னும் முடிவே செய்யவில்லை என்று கூறியுள்ள பிஜூ ஜனதா தள செய்தித் தொடர்பாளர், இப்படி ஒரு அணி உருவாவதே டிவியைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டோம் என்று கூறி கெளடாவை மூக்கறுத்துள்ளார்.
இன்று பெங்களூர் அருகே தும்கூரில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த மூன்றாவது அணி உருவானது. முன்னாள் பிரதமரான கெளடா தான் இந்த முறை இந்த அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்.
இந்த அணியில் மதசார்பற்ற ஜனதா தளம் தவிர, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் ஆகியவை இணைந்துள்ளன.
இன்று நடந்த இதன் துவக்க விழாவில் இடதுசாரி கட்சித் தலைவர்களான பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், அதிமுக சார்பில் அதன் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரால் ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்பதாலும் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவரால் ஆங்கிலத்தில் ஆலோசனை நடத்த முடியாது என்பதாலும் மைத்ரேயனை அனுப்பினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்த விழாவில் ஜெயலலிதாவே ஏன் நேரடியாக பங்கேற்பதைத் தவிர்த்தார் என்று தெரியவில்லை.
மாயாவதியும் இணைந்தார்:
இதற்கிடையே இந்த அணியில் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்துள்ளது. மாயாவதியின் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் சதீஷ் சந்திரா இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.
ஏற்கனவே மூன்றாவது அணி உருவானபோது அதற்குத் தலைவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்று அறிவிக்கப்பட்டதால் தான் அதை விட்டு வெளியே வந்தது அதிமுக. இரண்டாவது முறை மூன்றாவது அணி அமைக்கப்பட்டபோது மாயாவதியை தலைவராக முன் நிறுத்தினர் இடதுசாரிகள். இதனால் அந்த அணியில் இணைய மறுத்தது அதிமுக. தன்னையே தலைவராக்க வேண்டும் என்று கோரினார் ஜெயலலிதா.
இந் நிலையில் இப்போது மாயாவதியும் இந்த அணியில் இணைந்துள்ளார்.