ஆசிரியை அடி-உதை: மருத்துவமனையில் மாணவி
மதுரை: மதுரையில் பள்ளி தலைமை ஆசிரியை தாக்கியதில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் மேரி. இவரது மகள் மரியா (11). இவர் சந்திரா நடுநிலைப் பள்ளியில் 5 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பாட்டி பாக்கியம் என்பவர் வீட்டில் தங்கி படித்து வருகின்றார்.
மீலாடி நபியை முன்னி்ட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தினத்தில் மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியை ராணி, மாணவிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், மரியாவுடன் படிக்கும் நாகநந்தினி, லோகேஸ்வரி என்ற மாணவிகள் தாங்கள் பள்ளிக்கு வரமுடியாது என்று கூறி விடுப்பு கடிதமும் அத்துடன் அபராதம் கட்டமும் கொடுத்துள்ளனர்.
அதை மரியா பெற்றுக் கொண்டு அதை தலைமை ஆசிரியை ராணியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, தலைமை ஆசிரியை மரியாவிடம் நீ எதற்கு கடிதம் வாங்கி வந்தாய் என்று கூறி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மரியாவின் இடது கையில் ரத்தக்கட்டு ஏற்பட்டது.
இதனால், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் நந்தபாலனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications