அதிமுக உண்டியல் பணம் வங்கி அதிகாரிகள் முன்பு திறப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடந்த அதிமுக உண்ணாவிரதத்தின்போது வசூலிக்கப்பட்ட உண்டியல் பணம் நேற்று வங்கி அதிகாரிகள் முன்பு திறந்து எண்ணப்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உண்ணாவிரத மேடையில் உண்டியல்களும் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் வைக்கப்பட்ட உண்டியலில் ஜெயலலிதா முதலில் ரூ. 5 லட்சம் பணத்தைப் போட்டு தொடங்கி வைத்தார்.
இவ்வாறு சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத மேடைகளில் வைக்கப்பட்ட உண்டியல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
மொத்தம் 45 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியல்கள் நேற்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் அதில் இருந்த பணம் எண்ணும் பணி தொடங்கியது.
பணத்தை எண்ணி முடித்ததும் அவை அனைத்தும் வங்கியில் செலுத்தி டிடி எடுக்கப்படுமாம். இந்த டிடியை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக செலுத்தவுள்ளது.