11 தொகுதிகளை தேர்வு செய்துள்ள தமிழக பாஜக
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜக 11 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் தோற்றது. இந் நிலையில் இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர யாரும் ஆயத்தமாக இல்லை.
அதே நேரத்தில் மத்தியில் தாங்கள் ஆட்சியமைக்கும் நிலை வந்தால் அதிமுகவின் ஆதரவு தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பாஜகவிடம் உள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள சில இடங்களிலாவது போட்டியிட்டே ஆக வேண்டிய நிலையி்ல் அந்தக் கட்சி உள்ளது.
இதற்காக கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, தென் சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, வேலூர், தென்காசி ஆகிய தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 5 அல்லது 6 தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிடலாம் என்று தமிழக பாஜக தலைமை கருதுகிறது. ஆனால், இந்த 11 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என சில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த 11 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆயத்த பணிகளை பாஜக துவக்கியுள்ளது.
ராமநாதபுரத்தில் போட்டியிட தயார்-திருநாவு:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர்,
இலங்கை ராணுவம் இறுதி போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா சபை உள்பட பல வெளிநாடுகள் இலங்கையை கண்டித்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் பார்வையாளராக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்த வேண்டும். இது இன்னொரு நாட்டு பிரச்சினை அல்ல. லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள். எனவே இலங்கை பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா பலமாக இருந்தது. உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. இந்தியாவை நினைத்து இலங்கை செயல்பட்டது. இப்போது இந்தியாவை இலங்கை கண்டு கொள்ளவில்லை.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி பேசி வருகிறோம்.
கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நான் அறந்தாங்கி தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதி அடங்கி இருக்கும் ராமநாதபுரத்தில் கட்சி கட்டளையிட்டால் போட்டியிடுவேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அந்த தொகுதி மக்கள் என்னிடம் நல்ல மதிப்பு வைத்துள்ளார்கள். தொகுதிக்குள் இப்போதே தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
3-வது அணி இந்த தேர்தலில் எடுபடாது. ஆட்சிக்கும் வராது. தேர்தலுக்குப் பின் அந்தக் கூட்டணி உடையும்.
பொதுக்கூட்டங்களில் சிலர் சில வார்த்தைகளை ஆவேசமாக பேசியதை வைத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது தவறானது. பேச்சாளர்களின் இத்தகைய பேச்சால் ரத்தகளறி ஏதும் ஏற்பட போவதில்லை. அரசியல் நோக்கத்தில் பழி வாங்குவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த கூடாது. அதே நேரத்தில் பேச்சாளர்களுக்கும் நிதானம் தேவை. மேடையின் முன்பு இருப்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது பேசக்கூடாது என்றார்.