வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க தமிழகம் தடை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதிக்கவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சி.பி.சிங் கூறுகையில்,
நமது மின் தேவையில் 49 சதவீதத்தை வாரியத்தின் மின் உற்பத்தி மூலமும், 51 சதவீதத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதன் மூலமும் ஈடுகட்டி வருகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுதோறும் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. 2008-09ம் ஆண்டில் 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாட்டைப் போக்க, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால், அடுத்த ஆண்டில் இந்த இழப்பு மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும். மின்வாரியம் இழப்பைச் சந்தித்தாலும் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் 120 கோடி ரூபாய், மின்சாரம் வாங்குவதற்காக கூடுதலாக வாரியம் செலவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இது 225 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மாதம் இது 250 கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அடுத்த மூன்றாண்டில் 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபடும் தனியார் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்வாரியம் மற்றும் தமிழக நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.