ராணுவம்-புலிகள் போர்க் குற்றம்: ஐ.நா.
ஜெனீவா: இலங்கையில், ராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களுக்குச் சமமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நவி பிள்ளை கூறுகையில், யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலையை நோக்கி இலங்கை போர் சென்று கொண்டிருக்கிறது. அரசுத் தரப்பும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். இதன் மூலம் அப்பாவி மக்களை மீட்க வழி ஏற்படும்.
பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தொடர் தாக்குதல்..
பாதுகாப்பு வலையம் என அரசே அறிவித்த பகுதிகளில் தொடர்ந்து இலங்கை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல அப்பாவி மக்களை பிணைக் கைதிகள் போல விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைள் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாகும். பெரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இவை.
இதுபோன்ற குற்றங்கள், போர்க் குற்றங்களுக்கு சமமானவை. மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் இவை.
தற்போது அங்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளன. இன்னும் ஏராளமான பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்று பிள்ளை கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழர் நவி பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஐ.நா. போர்க் குற்றங்களுக்கான டிரிப்யூனலில் நீதிபதியாகவும் இவர் பணியாற்றியவர்.
இலங்கைக்கு ஆக்கப்பூர்வமாக உதவுவது இந்தியா மட்டுமே - இலங்கை அமைச்சர்
இதற்கிடையே, மற்ற நாடுகள் இலங்கைக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாதான் இனப்பிரச்சினையைத் தீர்க்க இலங்கைக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் இலங்கை சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்துத் துறை அமைச்சர் நிமல சிரிபாலா டிசில்வா.
இதுகுறித்து கொழும்புக்கு வந்திருந்த இந்திய மருத்துவக் குழுவினரிடையே சிரிபாலா டிசில்வா கூறுகையில், இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியாதான் ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்து வருகிறது. மற்றவர்கள் எல்லாம் இதுகுறித்து பேசிக் கொண்டும், அறிக்கை விட்டபடியும்தான் இருக்கிறார்கள்.
இந்தியாவோ அப்படியல்லாம் இலங்கைக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல், எந்தவித நிபந்தனையும் இல்லாமல், உதவி செய்ய முன்வந்திருக்கிறது. மருத்துவ உதவிகளையும் அளித்துள்ளது.
தமிழ் மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், தேவையான உதவிகளையும் இந்தியா செய்வதை வரவேற்கிறோம். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு தரமான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.