கோவை: மணல் கடத்தல்-தடுத்தவருக்கு வெட்டு
கோவை: கோவை அருகே நொய்யலாற்றில் மணல் கடத்தலை தடுக்க முயன்றவர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டப்பட்ட சம்பவம் அஙகு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகில் உள்ளது சந்தேகவுண்டன்பாளையம். இங்கு சுமார் 84 தலித் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் அருகே நொய்யலாற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சாமிநாதன் என்பவரும் அவரது மகனும் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி உத்தரவின் பேரில் பகவதி மற்றும் குமார் ஆகிய இருவரும் சென்று மணல் அள்ளக் கூடாது என அவர்களை தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாமிநாதனும் அவரது மகனும், பகவதி மற்றும் குமார் மீது தாக்குல் நடத்தினர். மேலும் அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பகவதி (48), குமார் (24) ஆகியோருக்கு முதுகு, கைவிரல், கால் பகுதி என பல இடங்களில் வெட்டு விழுந்து படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சிகிச்சைக்கு அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பயந்து சாமிநாதனும், அவரது மகனும் தலைமறைவாக உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.