கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவோம்-சிபிஎம் தேர்தல் அறிக்கை
டெல்லி: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவது, அமெரிக்கவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் டெல்லியில் வெளியிட்டார். 31 பக்கம் கொண்ட அந்த அறிக்கை குறித்து விளக்குகையில்,
மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம். அதில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில அம்சங்களை நீக்குவோம். அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்.
மாற்று பொருளாதார கொள்கையின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதத்தை எட்ட செய்வோம். சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் வெளியே கொண்டு வரப்படும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் கேட்டுள்ளதைப் போல் சுவிஸ் வங்கியில் இது தொடர்பாக இந்தியாவும் ஆவணங்களை கேட்கும். ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கு அங்கு கணக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு...
பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகள் மற்றும் தீர்வைகளை ரத்து செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலையை நன்றாக குறைக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் வலிமையாக்கப்படும். அன்னிய நேரடி சில்லறை வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும். இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கைகளையே பின்பற்றியது. இது மாற்றப்படும்.
மன்மோகனையும், சிதம்பரத்தையும் அவர்கள் வழியிலே விட்டிருந்தால் தனியார் வங்கிகளில் 75 சதவீத அன்னிய பங்குகளுக்கும், இன்சூரன்ஸ் துறையிலும் 49 சதவீத அன்னிய நேரடி முதலீடுக்கும் வழி செய்திருப்பார்கள். இடதுசாரிகளின் போராட்டத்தால் இன்சூரன்ஸ் துறையில் 29 சதவீத அளவிலேயே அன்னிய நேரடி முதலீடு தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாவதில் இருந்து தப்பியது.
நாடாளுமன்றம் மற்றும் உயரிய விசாரணை அமைப்புகளை சுய லாபத்துக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. மாநில அரசுகளைக் கலைக்கும் 355 மற்றும் 356 அரசியல் சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்படும்.
அமைச்சரவையில் பங்கேற்போம்...
தேவெ கெளடா மற்றும் குஜ்ரால் தலைமையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசுகள் அமைந்தபோது இடதுசாரி அணியில் உள்ள பிற கட்சிகள் ஆட்சியில் இடம் பெற்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் நாங்களும் அமைச்சரவையில் இடம்பெறுவோம்.
மூன்றாவது அணிக்கு யார் வருவார்கள், யார் செல்வார்கள் என்று இப்போது கூற முடியாது. நவீன் பட்நாயக், பாபுலால் மராண்டி ஆகியோர் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக மேலும் சில மாற்றங்கள் உருவாகும். மூன்றாவது அணி என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்தவில்லை. காங்கிரஸ், பாஜக தான் அந்த வார்த்தையை பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமர் பதவிக்கு ஆண் தலைவர்கள்...
மூன்றாவது அணி என்றால் என்ன என்பதை வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார். மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்கு சக்தி வாய்ந்த ஆண் தலைவர்களும் உள்ளனர். பிரதமர் பதவி தொடர்பாக அணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை. அந்த அணிக்கு கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டினார்கள். அவர்கள் பதவிக்கு வர தகுதியற்றவர்கள் என்றார் பிரகாஷ் காரத்.