பாமக அணியில் இடம் பெறக் கூடாது-தேமுதிக தொண்டர்கள் போர்க்கொடி
கூட்டணியா, தனித்துப் போட்டியா என்ற பெரும் சங்கடத்தில் உள்ளார் விஜயகாந்த். திமுக கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூறி வருகிறது. அதேபோல அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தைக் கொண்டு வரவும் அங்கிருந்து பீலர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
எக்காரணம் கொண்டும் கூட்டணியே கிடையாது, கடவுளுடன் மட்டும்தான் கூட்டணி, தனித்துதான் போட்டியிடுவேன், தைரியம் இருந்தால் அனைத்துக் கட்சிகளும் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார் விஜயகாந்த்.
இந்த நிலையில் கூட்டணிக்குள் அவரை இழுக்க நடந்து வரும் முயற்சிகளால் ஏதாவது ஒரு கூட்டணிக்குள் அவர் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பெரும் திரளான தொண்டர்கள் திரண்டனர்.
விஜயகாந்த் முன்னிலையில் அவர்கள் பாமக இருக்கும் கூட்டணியில் நாம் இணையக் கூடாது என்று கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் ஒரு வேளை பாமக திமுகவுக்குப் போனால் தேமுதிக அதிமுகவுக்குப் போகக் கூடும். பாமக அதிமுகவுக்குப் போனால் தேமுதிக திமுகவுக்குப் போகக் கூடும் அல்லது தனித்துப் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.