Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூக்கறுந்த மூளி; நாக்கறுந்த நரி-இது சரியா?: ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: எனது அறிக்கைகளை வசைமாரி பொழியும் அறிக்கைகள் என்றால் மூக்கறுந்து போன மூளி; அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி, மலம், வேஷக்காரி, தெருப்பொறுக்கி, நாய்க் கொழுப்பு, பூதகி, நாய், திமிங்கலம் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று கூறியிருக்கிறார். கடுமையான மின்வெட்டு, விஷம்போல் ஏறும் விலைவாசி, வெறிச்சோடி கிடக்கும் தொழிற்பேட்டைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, தற்காலிக வேலை நிறுத்திவைப்பு,

கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, பொருளாதார மந்த நிலை, வேளாண் உற்பத்தி பாதிப்பு, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்- ஒழுங்கு சீரழிவு,

நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை என ஏராளமானவற்றை மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு சான்றாகக் கூறலாம்.

இத்தனைக்கும் பிறகு, மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, மாநில நிர்வாகம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டே கடிதம் எழுதியதாகக் கூறும் கருணாநிதி, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொதுமக்களையும் கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை.

நான் ஏதோ வசைமாரி பொழிந்து அறிக்கைகள் வெளியிட்டதாக கூறி, எனது அறிக்கைகளில் உள்ள சில வார்த்தைகளை பட்டியலிட்டு இருக்கிறார். அந்தப்பட்டியலில் உள்ள வார்த்தைகளைப் பார்க்கும்போது, அவை வசைமாரி பொழியும் அறிக்கைகள் அல்ல, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிக்கைகள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதாக அறிந்து கொள்வார்கள்.

உதாரணமாக, “கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக்கிடப்பார் என்று 4.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி.

அந்த அறிக்கையில், தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல் வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.

அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சினை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்றால் வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் உண்மை நிலை. இதில் தவறு ஒன்றும் இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை என்று நான் 10.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். காவிரி நதி நீர் தாவா தொடர்பாக 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். ஆனால், இன்று வரை அந்தப் பிரச்சினையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கூட மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கருணாநிதி வற்புறுத்தி இருப்பாரா?.

அதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான எந்தத் தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

என்னுடைய 10.10.2008 ஆம் நாளிட்ட அறிக்கையில், உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால் தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும் என்று தெரிவித்திருந்தேன்.

என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமேயானால், இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஜனநாயகரீதியில், உண்மை நிலையை எனது அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நான் ஆற்றும் ஜனநாயகக் கடமைகளை எல்லாம் வசைமாரி பொழியும் அறிக்கைகள் எனக் கருணாநிதி குறிப்பிடுவது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும்.

எனது அறிக்கைகளை வசைமாரி பொழியும் அறிக்கைகள் என்றால், மூக்கறுந்து போன மூளி; அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி, மலம், வேஷக்காரி, தெருப்பொறுக்கி, நாய்க்கொழுப்பு, பூதகி, நாய், திமிங்கலம் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது.

எனவே மரபுக்கு ஒவ்வாத அறிக்கைகள் வெளியிடு வதையும், என்னைக்குறை கூறுவதையும் நிறுத்திக் கொண்டு, எனது அறிக்கைகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் ஆட்சியில் இருக்கப்போகும் சில நாட்களாவது நாட்டு நலப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+