கிரேனிலிருந்து இரும்பு ராடுகள் விழுந்து ஒருவர் பலி
சென்னை: சென்னையில் பறக்கும் சாலை கட்டுமான பணியில் போக்குவரத்துப் போலீசார், அதிகாரிகள், கிரேன் ஊழியர்களின் அலட்சியத்தால் இரும்புக் கம்பிகள் விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரவாயலிலிருந்து மாதவரம் வரையிலான மேம்பால பறக்கும் சாலை பணிகள் நடைப் பெற்று வருகிறது. அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே நேற்று இரவு ராட்சத கிரேன் மூலம் இரும்புக் கம்பிகளை பாலத்தின் மேல் ஏற்றும் பணி நடைபெற்றது.
அப்போது கீழே போக்குவரத்தை போலீசாரோ, அதிகாரிகளோ, கிரேன் ஊழியர்களோ நிறுத்தவில்லை. இதனால இரும்புக் கம்பிகள் கிரேனில் மேலே போய்க் கொண்டிருந்தபோது கீழே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
சுமார் 4 டன் எடையுள்ள இரும்பு ராடுகள், இரும்பு ரோப் கயிறு மூலம் கட்டப்பட்டு பாலத்தின் மீது ஏற்றப்பட்டபோது ரோப் அறுந்து இரும்புக்க ம்பிகள் கீழே விழுந்தன.
இதில் கீழே சென்று கொண்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் மீது இரும்பு ராடுகள் விழுந்தன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் மற்ற வாகனங்களில் சென்ற 7 பேர் படுகாயமடைந்தனர்.
பலியானவர் அம்பத்தூர் நகரசபை முன்னாள் திமுக கவுன்சிலரான சீனிவாசன் (73) என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் நடந்தவுடன் கிரேன்களைக் கொண்டு இரும்புக் கம்பிகளை அகற்றி அதில் சிக்கியவர்களை காப்பாற்றாமல், கிரேன் ஆபரேட்டர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
இதனால் இரும்பு ராடுகளை தீயணைப்புப் படையினர் வந்த பின்னரே அகற்ற முடிந்தது. அதற்குள் அதில் சிக்கியிருந்த சீனிவாசன் பலியாகிவிட்டார்.