நான் தவறாகப் பேசவில்லை- மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை: வருண் காந்தி
சஞ்சய் காந்தி - மேனகா காந்தியின் ஒரே மகன் வருண் காந்தி. முதல் முறையாக இந்த லோக்சபா தேர்தலி்ல அவர் போட்டியிடுகிறார். தனது தாய் 6 முறை எம்.பியாக இருந்த பிலிபித் தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளார்.
அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். மற்றவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி
விட வேண்டும்.
இந்துக்களுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவர்களது தலையை நான் வெட்டுவேன் என்று முஸ்லீம்கள் குறித்து பேசினார்
வருண் காந்தி.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. வருண் காந்தி மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ.பி.
தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நேற்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் வருண் காந்தி. அதில், நான் முதல் முறையாக தேர்தலில் நிற்கிறேன்,
முதல் முறையாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் குறிப்பிட்டுத்தான் பேசினேன். ஆனால் எனது பேச்சை டிவிகள் திரித்து கூறி விட்டன.
எனது தரப்பு விளக்கத்தை நான் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளேன்.
பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தரவுள்ளேன்.
இருப்பினும், எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் வருண் காந்தி.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வருண் காந்தி. அப்போது அவர் கூறுகையில், நான் மத வெறியைத் தூண்டும் வகையில் எதையும் பேசவில்லை.
ஒரு இந்துவாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். எனது பேச்சு அடங்கியதாக கூறப்படும் சிடியில், எனது குரலோ அல்லது நான் கூறியதாக கூறப்படும் வார்த்தைகளோ இல்லை. அது திரித்து தயாரிக்கப்பட்ட சிடி.
பிலிபித் தொகுதியில் நான் பேசியது, வன்முறை மற்றும் மத துவேஷத்தால் எனது தொகுதியைச் சேர்ந்த இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்றுதான் நான் கூறினேன்.
நான் ஒரு காந்தியவாதி. ஒரு இந்து, இந்தியன். எனது நம்பிக்கை மீது எனக்கு பெருமை உள்ளது. எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
அரசியல் சதித் திட்டத்தில் என்னை பலிகடாவாக்கியுள்ளனர். என்னை இந்தியாவுக்கு எதிரானவனாக காட்ட சிலர் சதி செய்கின்றனர். நாட்டு மக்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார் வருண் காந்தி.