காவல்துறை சீர்குலையும்-போலீஸ் நலச் சங்கம்
சென்னை: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் காவல்துறை ஒட்டுமொத்தமாக சீர்குலையும், காவல்துறையினரின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் பாதிக்கப்படும் என காவல்துறை நலச் சங்கத்தின் தலைவர் அந்தோணிச்சாமி எச்சரித்துள்ளார்.
தமிழக அளவில் காவல்துறையினரின் குடும்பங்களை ஒருங்கிணைத்து காவல்துறை நலச் சங்கம் என்ற பெயரில் அனைவரையும் இணைத்து இயங்கி வருகிறார் அந்தோணிச்சாமி.
வக்கீல்கள் போராட்டத்திற்குப் பதிலடியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த அமைப்பின் சார்பி்ல போராட்டங்களும் நடத்தப்பட்டன.
வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் அந்தோணிச்சாமி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் காவல்துறை சீர்குலையும் என அந்தோணிச்சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எந்தவித விசாரணையும் இல்லாமல் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் மனம் உடையும். காவல்துறை சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது.
இது ஒரு பாரபட்சமான உத்தரவு. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, விசாரணையே இல்லாமல் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருப்பது தவறு.
உடனடியாக தமிழக அரசு இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும். அந்த மனு மீதான விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய கூடாது என்று கோர வேண்டும்.
வக்கீல்கள்- போலீஸ் மோதல் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்களை பார் கவுன்சிலிருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கும் தொடர வேண்டும்.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை தீவைத்துக் கொளுத்திய அதே வக்கீல்கள், இப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் வரவேற்று கொண்டாடி பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கியிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றார் அந்தோணிச்சாமி.












Click it and Unblock the Notifications