உயர்நீதிமன்ற உத்தரவு-ஐபிஎஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை
உயர்நீதிமன்ற தீர்ப்பு காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக இருக்கிறோம், ஆனால் சுனாமி போல பொங்கி எழுவோம் என எச்சரித்து சென்னையில் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உடனடியாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தை கூட்ட சங்கத்தின் தலைவர் கூடுதல் டிஜிபி சேகர், செயலாளர் ஐஜி ஜாபர்சேட் ஆகியோருக்கு காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் விரைவில் கூடும் என்று தெரிகிறது.
இரு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கோரி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகள் அப்பீல் செய்ய கோரிக்கை வைத்தால் அதை அரசு மறுக்காது என்றும் கருதப்படுகிறது. தேர்தல் காலம் என்பதால் காவல்துறையினரை அமைதிப்படுத்தும் பொருட்டு அரசே மேல் முறையீட்டை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிகிறது.