மாவட்ட செயலாளரே இல்லாத கரூர் மதிமுக!
கரூர்: கரூர் மாவட்டம் மதிமுக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் இன்றி நடந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் வேதனையுடன் கூறியதாவது:
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உயிர் நீத்த கரூர் நொச்சிப்பட்டி தண்டபாணியின் உடல் தகனம் செய்யப்பட்ட போது தான் மதிமுக என்ற கட்சி உருவானது.
இதனையடுத்து திமுகவில் இருந்த கரூரைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் வைகேவின் மேல் கொண்ட நேசம் காரணமாக மதிமுகவில் இணைந்தனர். இதனால் கரூர் மதிமுகவின் எக்கு கோட்டையாக விளங்கியது.
வைகோவின் நெருங்கிய நண்பரான மொஞ்சனூர் இராமசாமியை மாவட்ட செயலாளராக வைகோ நியமித்தார். அவர் பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றினார்.
அவர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ 13 பேர் கொண்ட பொறுப்புக் குழு அமைத்தார். அந்த குழு கடந்த ஒன்னறை வருடங்களாக செயல்பட்டு வருகின்றது.
கட்சிக்கு மாவட்டச் செயலாளர் இல்லாததால் ஆர்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், போன்றவற்றிலும், பல முக்கிய விவகாரத்திலும், முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். இதை நாங்கள் வைகோவிடமும் சொல்ல முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார் அவர்.
தமிழகத்தில் தனிப் பெரும் கட்சியாக விளங்கும் மதிமுகவில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் இன்றியே இயங்கி வருகின்றது. மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வைகோ முன்வர வேண்டும் என்பதே மதிமுகவினரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications