'பஸ் தினம்': சென்னையில் மாணவர்கள் கல்வீச்சு-கலாட்டா
சென்னை: பஸ் தினம் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போக்குவரத்து துறை ஊழியர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்
மாணவர்கள் தாங்கள் வாடிக்கையாக வரும் பஸ்சில் ஆண்டுக்கு ஒருமுறை பஸ் தினம் கொண்டாடுவது வழக்கம். பின்னர் இது செமஸ்டருக்கு ஒன்று என மாறி, தற்போது அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை ஆவடியிலிருந்து மந்தைவெளி வரை செல்லும் 41டி பஸ்சில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடினார்கள்.
மேளதாளத்தோடு பஸ்சில் ஆட்டம் போட்டு சக பயணிகளை சங்கடப்படு்த்தி வந்த இவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறியபடி நடனம் என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொண்டார்கள். இதனால் விபத்து ஏற்படலாம் என பயந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என அனைவரும் அவர்களை கிழே வருமாறு அழைத்துள்ளனர்.
கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்த அவர்களின் காதுகளில் இந்த அறிவுரை விழவில்லை. இதையடுத்து டிரைவர் அண்ணாநகர் பஸ் டெப்போவில் வண்டியை நிறுத்திவிட்டார். அதன்பின்னர் தொடர்ந்து செல்ல மறுத்துவிட்டார்.
தங்களது பஸ் தினம் பாதியிலே முடிவடைந்ததை அடுத்து எரிச்சலடைந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் அந்த பக்கம் வந்த பஸ்கள், பஸ் டெப்போ மற்றும் டீ கடை ஆகியவையின் மீது கல்வீ்ச்சில் ஈடுபட்டனர். இதில் ஒரு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக சேதம் அடைந்தது. டெப்போவில் இருந்த டிரைவர் மகேந்திரன், கண்டக்டர்கள் ஸ்ரீதர், கண்ணன், அறிவழகன் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
டிரைவர்கள் சாலை மறியல்...
போக்குவரத்து ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாநகரில் இருந்து ஆவடி மற்றும் கோயம்பேடு சென்ற பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சுமார் 100க்கும் அதிகமான போக்குவரத்து ஊழியர்கள் நடுரோட்டில் மறியல் செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை மாணவர் என நினைத்து அடித்து, உதைத்தனர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. பின்பு அவர் மாணவர் இல்லையென்றும் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் அங்கு வந்த போலீசார், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications