கூட்டணிக்கு பாமக வந்துவிடும்: வைகோ-சிபிஎம்
சென்னை: பாமக விரைவில் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதாரஜனும் கூறியுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து பலியான அமரேசனின் 40வது நாள் சடங்கில் பங்கேற்க வைகோ அவரது உருவப்படத்தை திறந்து வைத்து அவரது மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
பாமக விரைவில் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. வரக்கூடிய செய்திகள், வாய்ப்பு உள்ளதாகத்தான் தெரிகின்றன என்றார்.
ஆனால், திருமாவளவன் திமுக அணியில் இருக்கிறாரே என்று கேட்டதற்கு,திருமாவளவன், ஈழத் தமிழர்களுக்காக போராடும் போராளி. அவருக்கு சில நிர்பந்தங்கள், நெருக்கடிகள் இருக்கக்கூடும். அவர் எந்த இடத்தில் இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்காக போராடக்கூடிய போராளி என்றார்.
தேமுதிகவும் உங்கள் கூட்டணியில் இடம்பெறுமா என்று கேட்டதற்கு, அதற்கான முயற்சிகள் எந்த அளவில் உள்ளன என்று தெரியவில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மதிமுகவில் இருந்து மு. கண்ணப்பன் விலகியதால் எங்களுக்கு எந்தவித சேதாரமும் இல்லை. பல சலுகைகளை அனுபவித்துவிட்டுதான் அவர் சென்றிருக்கிறார். அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூட அவருடன் செல்லவில்லை.
அராஜகம், அக்கிரமம். அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தின் கண்ணியத்தை முறிக்கின்ற வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத்தை சிறையில் அடைத்துள்ளனர். நானே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, சம்பத்திற்காக வாதாட இருக்கிறேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பாமகவுடன் பேச்சு நடக்கிறது-சிபிஎம்:
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனும் கூறியுள்ளார்.
தேர்தலுக்காக பொது மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதி திரட்டி வருகிறது. வசூலிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை துறைமுகம் பகுதியில் நிதி வசூலை வரதராஜன் துவக்கி வைத்தார்.
என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாபாரிகள் ஏராளமாக நிதியளித்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய வரதராஜன், எங்களது கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications