தீக்குளித்த ராஜசேகர் குடும்பத்துக்கு ரூ3 லட்சம்-நெடுமாறன்
அரியலூர்: இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கீழவெளிகாட்டு நாகப்பேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30) கூலி தொழிலாளி. பாமக தொண்டர். இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், அஜித்(10) என்ற மகனும் உள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டு மன வேதனையடைந்த ராஜசேகர் கடந்த 15ம் தேதி அன்று தீக்குளித்தார். தஞ்சை மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் ராஜேசகர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த ஜெயங்கொண்டம் வாலிபர் ராஜேசகர் குடும்பத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ரூ 3 லட்சம் வழங்கப்படும் என்றார்.