ராஜஸ்தானின் டோங் தொகுதியில் போட்டியிட அஸார் விருப்பம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் தொகுதியில் போட்டியிட அஸாருதீன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது முதலே அஸாருதீன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் அவர் போட்டியிடலாம் என முதலில் கருதப்பட்டது. பின்னர் மும்பையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. பின்னர் உ.பியில் போட்டியிடலாம் என பேச்சு அடிபட்டது.
ஆனால் அஸாருதீன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரம்பரியான டோங்க் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளாராம்.
ராஜஸ்தான் சாம்ராஜ்யத்தில் இடம் பெற்றிருந்த ஒரே முஸ்லீம் சமஸ்தானம் டோங்க் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
டோங்க் தொகுதியில் போட்டியிடுவது குறித்து அஸாருதீன் கூறுகையில், டோங்க் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். அங்கு பலமுறை நான் போயுள்ளேன். எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னை அங்கு போட்டியிட அவர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் அதுகுறித்த முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்றார்.
கடந்த வாரம் அஸாருதீன் ஆஜ்மீர் தர்காவுக்குப் போயிருந்தார். இதனால் அவர் ராஜஸ்தான் மாநில தொகுதிக்கு குறி வைப்பதாக கருதப்பட்டது. தற்போது தனது ஆசையை வெளிப்படையாக அறிவித்துள்ளார் அஸார்.
டோங்க் தொகுதியில் 2 லட்சம் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். ராஜஸ்தான் தொகுதிகளிலேயே அதிக அளவில் சிறுபான்மையினர் உள்ள ஒரே தொகுதியும் இதுவே.
ஆனால் முஸ்லீம்களை மட்டும் தான் முக்கியமாக கருதவில்லை என்று கூறும் அஸார், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் தான் சேவை செய்ய விரும்புவதாகவே கூறியுள்ளார் அஸார்.
ஆனால் டோங்க் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் ஜாம்பவான் நமோநாராயணன் மீனா முயன்று வருகிறார். இதனால் அஸாருக்கு சீட் கொடுப்பதா அல்லது நமோ நாராயணனுக்கு தருவதா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது.