சிறு கட்சிகளுக்கு அதிமுகவில் சீட் இல்லை? - வெற்றிக்குப் பாடுபட ஜெ. வேண்டுகோள்
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறு கட்சிகளின் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தக் கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகி விட்டதாக தெரிகிறது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய பெரிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
பாமக கூட்டணிக்கு வருவது போலத் தெரிகிறது. இப்போதைக்கு இல்லை என்றாலும் கூட பாமக அதிமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகி விட்டால் கூடவே விடுதலைச் சிறுத்தைகளும் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஆளுக்கு எத்தனை சீட் என்பதை கிட்டத்தட்ட ஜெயலலிதா முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறு கட்சிகளுக்கு அவர் சீட் எதுவும் தரப் போவதில்லை என்று தெரிகிறது. காரணம், அவர்களுக்குக் கொடுக்க சீட் இருக்காது என்பதால்.
நேற்று தங்கள் கூட்டணி கட்சியில் உள்ள சிறு கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. இந்த கூட்டத்தில், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் என்.சேதுராமன், மதசார்பற்ற ஜனதாதள கட்சி மாநில தலைவர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்களிடம் சீட் கொடுக்க இயலாத சூழ்நிலையை ஜெயலலிதா விளக்கியதாக தெரிகிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுங்கள் என்றும் வலியுறுத்தினார் ஜெயலலிதா.