அதிமுக கூட்டணிக்கு வருமாறு திருமா.வுக்கு ராமதாஸ் மீண்டும் யோசனை

தமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே.
இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை.
ஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிடம் எடுத்துக் கூறி எப்படி வர முடியும் என கேட்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ராமதாஸ் விடாமல் திருமாவளவனை சமாதானப்படுத்தி வருகிறாராம். மீண்டும் அவர் திருமாவளவனுடன் பேசியுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் ஒன்றாக போராடி வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பிரியக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளாராம்.
என்ன பிரச்சினையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அதிமுக கூட்டணிக்கு வருமாறு அவர் திருமாவளவனை கேட்டுக் கொண்டுள்ளாராம்.
நாளை பாமகவின் முடிவு அறிவிக்கப்படவுள்ளது. அதற்குள் திருமாவளவனின் முடிவை கேட்டுள்ளாராம் ராமதாஸ். ஆனால் பாமகவின் முடிவைப் பார்த்து விட்டு தனது முடிவை அறிவிக்கலாம் என்று நினைக்கிறாராம் திருமாவளவன்.
இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை.












Click it and Unblock the Notifications