மேல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு - மாயாவதி வீசும் வலை!
பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளார் மாயாவதி.
தனது பிரசாரத்தின்போது காங்கிரஸ், பாஜகவை கடுமையாக சாடினார். மேல் ஜாதியினரின் வாக்குகளைக் கவரும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.
மாயாவதி பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கு எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும்.
உ.பியில் இதை நான் வெற்றிகரமாக செய்துள்ளேன். இதை தேசிய அளவிலும் விஸ்தரிப்பேன்.
காங்கிரஸும், பாஜகவும் இத்தனை ஆண்டு கால ஆட்சியில், ஏழை மக்களின் நலன்களை புறக்கணித்து விட்டன. அவர்களின் உயர்வுக்காக எதையும் செய்யவில்லை இந்த கட்சிகள்.
மேலும், இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் இதுவரை இருந்த அரசுகள் நிலையான கொள்கையைக் கையாளாமல் அதை நீர்த்துப் போகச் செய்து விட்டன.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளையும் காங்கிரஸ், பாஜக அரசுகள் தீர்க்க தவறி விட்டன.
பெரும் பெரும் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே இவர்கள் ஆட்சி புரிகின்றனர்.
சாதாரண வகுப்பு மக்கள் தரும் நிதியைக் கொண்டுதான் நான் கட்சியை நடத்துகிறேன், தேர்தல் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறேன். எனவே எனது அரசுக்குத்தான் ஏழைகளின் பிரச்சினைகள் தெரியும். அவர்களின் தேவைகளும் எங்களுக்குத்தான் புரியும்.
நாங்கள் சொன்னதை மட்டுமே செய்வோம். உ.பி. அரசின் நிர்வாகத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றார் மாயாவதி.
தனது பேச்சின்போது இடதுசாரிகள் குறித்து அவர் எந்த விமர்சனமும் செய்யவில்லை.
52 நாள் தேர்தல் பிரசாரத்தை மாயாவதி திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.