புதுக்கோட்டை தேமுதிக பிரமுகர் பெங்களூரில் வெட்டிக் கொலை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் கணேசன் பெங்களூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன் (32). இவர் தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினாராக உள்ளார். மேலும், கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார்.
கணேசன் கடந்த 10 வருடங்களாக பெங்களூர் கலாசிப்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து நடத்தி வந்துள்ளார்.
இதற்காக இவர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தங்கி விடுவார்.
இந்த நிலையில் அவர் பெங்களூரில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் புதுக்கோட்டை செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் கணேசனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கணசேனுக்கு உடலில் பல இயங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அதே இடத்தில் கணேசன் இரத்த வெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் அந்த 3 மர்ம நபர்களும் தப்பியோடிவிட்டனர்.
தகவல் அறிந்த கலாசிப்பாளயைம் போலீசார் விரைந்து சென்று கணேசன் சடத்தை கைப்பற்றியுள்ளனர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் கணேசன் சீட் வேண்டி பணம் கட்டியிருந்தார். அதனால் அவரை அரசியல் ரீதியாக யாரும் பலிவங்கியுள்ளனரா அல்லது வியாபார போட்டியா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகொலை செய்யப்ட்ட கணேசனுக்கு ராஜேஸ்வரி (28) என்ற மனைவியும், அஜீத்குமார்(13) என்ற மகனும், ஆயிஷா(9)என்ற மகளும் உள்ளனர்.
கணேசன் படுகொலை தகவல் புதுக்கோட்டையில் முழுவதும் பரவியதால் தேமுதிக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.