தென்காசி தொகுதிக்கு குறி வைக்கும் விஐபிக்கள்
தென்காசி: தென்காசி தொகுதியில் போட்டியிட கட்சிகளுக்கிடையேயும், முக்கியப் பிரமுகர்களுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அப்பாத்துரை உள்ளார்.
தென்காசி, ஆலங்குலம், அம்பாசமுத்திரம, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக தென்காசி பாராளுமன்ற தொகுதி இருந்தது.
தற்போது தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி முடிவகாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தங்களது கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனு பெற்று வருகின்றன.
தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் மகன் எட்வின் பிரபாகர், ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடி மகன் குமார், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, செங்கோட்டை ஓன்றிய திமுக செயலாளர் பரமசிவன், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, சீனியம்மாள், கடையநல்லூர் முன்னாள் ஓன்றிய செயலாளர் இளங்கோ, வக்கீல் துரை உள்ளிட்டோர் விருப்ப மனு செய்துள்ளனர்.
அதிமுக சார்பில் 80 பேர் தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளனர்.. முன்னாள் எம்பி முருகேசன், நெல்லை முன்னாள் மேயர் ஜெயராணி, கடையநல்லூர் யூனியன் சேர்மன் தீபக், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் துரையப்பா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
காங்கிரஸ் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ பெருமாள், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் மகன் மோகன், புறநகர் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி, பிரிவு தலைவர் ஞானையா, பாரத ஸ்டேட் வங்கி இயக்குனர்களில் ஓருவரான விசுவநாதன், டாக்டர் குமாரசாமி ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
பாஜக சார்பில் மாநில மகளிரணி தலைவி சாரதா, இந்திய கம்யூ கட்சி சார்பில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ராமகுரு ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.
புதிய தமிழகம் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு முறை இத்தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இம்முறையும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் சூசை, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகி இலஞ்சி கிருஷ்ணன், சமக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.
தேமுதிக சார்பில் கடையநல்லூர் யூனியன் புதுக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர் இன்பராஜ், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், குணசேகரன் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பகவதி, சங்கரன்கோவில் செந்தில் குமார் ஆகியோரின பெயர் அடிபடுகிறது.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருச்சிக்கு தெற்கே தென்மாவட்டங்களில் உள்ள ஒரே தனித் தொகுதி என்பதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பலரும் இதை குறி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications