இலங்கைத் தமிழர்களுக்காக தேமுதிக தொண்டர் தீக்குளித்து மரணம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையை அடுத்த ஆலங்குடியில் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தேமுதிக தொண்டர் பாலசுந்தரம் தீ குளித்து இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது கொத்தமங்கலம் பளுவான் நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (40). இவரது மனைவி செல்வம். இவர்களுக்கு பார்த்திபன், நடனசுந்தரம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சமையல் கலைஞரான பாலசுந்தரம், தேமுதிகவைச் சேர்ந்தவர். சமீப காலமாக இலங்கையில் நடைபெற்றும் போரால் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருவதை கண்டு மனம் வேதனை அடைந்தார்.
நேற்று இரவு நண்பர்களுடன் இலங்கை தமிழர்கள் விவகாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் சென்ற பாலசுந்தரம் உடலில் சேலையைச் சுற்றி அதில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தமிழக அரசே இலங்கை தமிழர்களை காப்பாற்று என்று குரல் கொடுத்துக் கொண்டே தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் உடல் கருகிய பாலசுந்தரம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடலை தகனம் செய்ய கொண்டு சென்றனர்.
ஆனால் பாலசுந்தரம் மரணம் குறித்து தகவல் அறிந்ததும், தேமுதிகநிர்வாகிள், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.
உடலை தகனம் செய்யக் கூடாது என்று கூறியதால் பாலசுந்தரத்தின் உடல் பாதி வழியில் இறக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலசுந்தரத்தின் உடலை எரிக்கக்கூடாது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பாலசுந்தரத்தின் உடல் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
விஜயகாந்த் அதிர்ச்சி
பாலசுந்தரம் மரணம் குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகே பலுவான் நகர், குடியிருப்பு காலனியை சேர்ந்த தே.மு.தி.க. கிளைச்செயலாளர் கே.பாலசுந்தரம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தியை அறிந்து துயருற்றேன்.
தமிழர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும்.
இனிமேலாவது தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து தே.மு.தி.க.வினர் எவரும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறியுள்ளார்.