கச்சத்தீவை புனிதப் பகுதி என்பதா இலங்கைக்கு ஜெ. கண்டனம்
சென்னை: கச்சத்தீவை முதலில் நாம் திரும்பப் பெற வேண்டும். அதை புனிதப் பகுதி என்று அறிவித்துள்ள இலங்கையின் செயல் கண்டனத்துக்குரியது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கச்சத்தீவு புனிதப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
1895 மற்றும் 1930-ம் ஆண்டுகளின் வரைபடங்களின்படி கச்சத் தீவு இந்தியாவிற்கே சொந்தமானது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு 26.6.1974-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியால், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
அப்போது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதிதான் இருந்தார். ஆனால் கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதை அவர் எதிர்க்கவில்லை. அவரது துரோகச் செயலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிகுப்ப படையாச்சி என்பவரால் கட்டப்பட்ட புனித அந்தோணியார் கோயில் கச்சத் தீவில் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அங்கு நடத்தப்படும் திருவிழாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், மீன் வலைகளை அங்கு உலர்த்தவும், நமக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் கூட பறிபோய்விட்டன.
எனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991-ம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோது, கச்சத் தீவை மீட்போம் என அறிவித்தேன்.
இது குறித்து பல முறை மத்திய அரசையும், இந்திய பிரதமரையும் வலியுறுத்தினேன். 16.9.2004 அன்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கச்சத் தீவில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன்.
இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு பதில் மனு கூட தாக்கல் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் தமிழக மீனவர்களின் மீது கருணாநிதிக்கு உள்ள அக்கறை.
கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போகிறோம் என தன்னிச்சையாக இலங்கை அரசு அறிவித்தும், அது குறித்து மாநில தி.மு.க. அரசும், மத்திய அரசும் வாய் திறக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இலங்கைத் தமிழர்களை அழிக்க உறுதுணையாக இருந்தது போல், கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிப்போம் என்ற இலங்கை அரசின் இந்த அறிவிப்புக்கும் மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக மீனவர்களை காப்பாற்றும் வகையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பை முளையிலேயே கிள்ளி எறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications