பிரதமரின் செயலாளர் நாயர் திடீர் கொழும்பு பயணம்
கொழும்பு: பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் கொழும்புக்கு செல்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்காவின் அழைப்பை ஏற்று அவர் நாளை கொழும்பு செல்கிறார்.
இரு நாடுகளின் பொது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நாயர் கொழும்பு செல்வதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இரு தரப்பும் பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளை நாயர் சந்திக்கவுள்ளார் என இலங்கை அதிபர் அலுவலக தகவல் தெரிவிக்கிறது.
சர்வதேச அமைப்புகள்- இலங்கை தாக்கு...:
இந்நிலையில் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
விடுதலை புலிகளுக்கான போரை விரைவில் முடிக்கவிடாமல் சர்வதேச உதவி அமைப்புகள் கூட்டணி அமைத்து முட்டுக்கட்டை போட்டு வருகி்ன்றன. பாதுகாப்பான பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் கூறுவது முற்றிலும் தவறானது.
இந்த அமைப்புகள் சண்டை நின்றுவிட்டால் தங்களுக்கு வருமானம் போய்விடும், தங்களால் மேலும் சம்பாதிக்க முடியாது என கருதுகின்றன. இந்த யுத்தத்தை நீட்டிப்பதில் விடுதலை புலிகளை தவிர்த்து சர்வதேச மற்றும் உள்ளூர் உதவி அமைப்புகளும் நன்கு திட்டமிட்டு செயல்படுகின்றன.
கேர் இன்டர்நேஷனல் அமைப்பு தனது ஊழியர் ஒருவர் பாதுகாப்பு பகுதியில் பலியானதாக தெரிவித்துள்ளது. அவர் பாதுகாப்பு பகுதியில் இறக்கவில்லை. யுத்தகளத்தில் இலங்கை ராணவத்துக்கு எதிராக போரிட்டதால் கொல்லப்பட்டுள்ளார் என்கிறது அந்த இணையதளம்.
ஆனால், இது குறித்து கேர் இன்டர்நேஷனல் அமைப்பு தலைவர் நிக் ஓஸ்பார்ன் கூறுகையில், நாங்கள் ஒரு ஊழியரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்துக்கு எங்களது ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.












Click it and Unblock the Notifications