இனப்படுகொலை-பட்டம் வாங்க மறுத்த மாணவி!
அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இலங்கை தமிழர் படுகொலையை காரணம் காட்டி மாணவி ஒருவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூரில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் படித்து முடித்த மாணவ - மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்து இருந்த போது, ஒவ்வொரு மாணவராக பெயர் சொல்லி அழைக்கப்பட அவர்கள் மேடைக்கு சென்று பட்டத்தைப் பெற்றனர்.
இந்த கல்லூரியில் எம்.எஸ்.சி. சுற்றுசூழல் படிப்பு முடித்த அரியலூர் ஒட்ட கோவிலை சேர்ந்த மாணவி சுமதியை பட்டம் பெற அழைத்தனர்.
ஆனால், அவர் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தும் பட்டம் பெற முன்வரவில்லை. இதனால் மீண்டும் மீண்டும் அவரை அழைத்தும் அவர் பட்டம் பெற செல்ல மறுத்துவிட்டார். இதன் பிறகு மற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
விழா முடிந்ததும் துணை வேந்தர் பொன்னவைக்கோ, பட்டம் பெற மறுத்த மாணவி சுமதியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தனது மனதை மிகவும் பாதித்து உள்ளதாகவும், அதனால் தான் பட்டம் பெற விரும்பவில்லை என்று மாணவி சுமதி கூறினார்.
இதனையடுத்து, மாணவி சுமதியை சமாதானம் செய்த பொன்னவைக்கோ அந்த மாணவிக்கு பட்டம் வழங்கினார்.