வெளிநாட்டு பெண்ணை 2வது திருமணம் செய்தவர் கைது
விழுப்புரம்: முதல் மனைவிக்கு தெரியாமல் பக்ரைனில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விழுப்புரம் வாலிபர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் என்பவரது மகன் வேலு (32). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அமுதா (32) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கிரிஜா (11) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்காக அமுதாவிடம் ரூ.50,000 வரதட்சணையாக கேட்டு வேலுவும், அவருடைய தாய் சின்னப் பிள்ளையும் (50), சகோதரி தைலம்மாளும் (36) கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்பு, வேலு பக்ரைன் நாட்டுக்கு சென்று கார் டிரைவராக பணியாற்றியுள்ளார்.
அப்போது அங்கு வீட்டுவேலை செய்த கும்பகோணத்தை சேர்ந்த தையல்நாயகி என்பவரோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு அது கனிந்து திருமணம் வரை சென்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலு, தனது இரண்டாவது மனைவி தையல்நாயகியுடன் சொந்த ஊரான கண்டாச்சிமங்கலத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து அமுதா, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் அமுதாவின் கணவர் வேலு, மாமியார் சின்னப்பிள்ளை, கணவரின் தங்கை தையல்மாள் மற்றும் கணவரின் 2வது மனைவி தையல்நாயகி ஆகிய நால்வர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.