பாதிச் சம்பளம்- என்.ஜி.ஓ. சேவை - ஊழியர்களுக்கு இன்போசிஸ் புதுத் திட்டம்

ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பாமல், அதேசமயம், அவர்களுக்கு முழுச் சம்பளமும் கொடுக்காமல், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இந்த திட்டத்தை இன்போசிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நந்தன் நிலேகனி அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது ஊழியர்கள் ஒரு வருட காலத்திற்கு ஏதாவது என்.ஜி.ஓ. அமைப்புடன் இணைந்து பணியாற்றலாம். அவர்களுக்கு அந்த ஒரு வருட காலத்திற்கு நாங்கள் பாதி சம்பளத்தை வழங்குவோம்.
பொருளாதார நெருக்கடி நிலை தொடருகிறது. நாங்கள் எங்களுக்குத் தேவையான பணியாளர்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறோம். முழுமையாக ஆளெடுப்பை நிறுத்தவில்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில், கேம்பஸ் ஆளெடுப்பு குறைந்து விட்டது. மிகவும் அரிதாகி விட்டது. கடந்த மார்ச் மாதம் நாங்கள் தேர்வு செய்த மாணவர்கள் இந்த ஆண்டு கோடைகாலத்தில் எங்களது அலுவலகங்களில் பணியில் சேருகிறார்கள்.
தற்போது எங்களது பணியாளர்கள் அனைவருக்கும் பணிகள் முழுமையாக இல்லை. எனவேதான் அவர்களை என்.ஜி.ஓக்களில் சேர்ந்து பணியாற்ற கூறுகிறோம். இது புதுமையான திட்டமும் கூட.
இதுதவிர பார்மச்சூட்டிகல்ஸ், மீடியா, இயற்கை வளம் உள்ளிட்ட துறைகளிலும் நாங்கள் நுழையத் தொடங்கியுள்ளோம்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாயில் 88 சதவீதம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்துதான் கிடைக்கிறது. இதனால் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் போல எங்களையும் பாதித்துள்ளது.
இந்த ஆண்டு 11 முதல் 12 சதவீத வருவாய் அதிகரிப்பை எதிர்பார்க்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் இரு இலக்க வளர்ச்சியில்தான் உள்ளோம். இது சாதகமான விஷயம்தான் என்றார் நிலேகனி.












Click it and Unblock the Notifications