சிறையில் தீவிரவாதிகள் பிளாக்கில் 'அண்ணாச்சி'
சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சரவணபவன் ஹோட்டல் அதிபர் 'அண்ணாச்சி' ராஜகோபால் சென்னை புழல் மத்திய சிறையில் தீவிரவாதிகள் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜீவஜோதியி்ன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 10 பேர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தீவிரவாதிகள் அடைக்கப்படும் பிளாக்' ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜகோபால் ஏ கிளாஸ் கோரினாலும் அந்த வகுப்பு வழங்கப்படவில்லை. அவர் தற்போது சாதாரணமாக மற்ற கைதிகளோடு தரையில் படுத்தே தூங்குகிறார். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின்விசிறி உண்டு.
அவர் தண்டனை கைதி என்பதால் அவருக்கு கைதிகளுக்கான நம்பர் வழங்கப்பட்டுள்ளது. ராஜகோபாலின் நம்பர் 2432.
சிறைக்கு கொண்டு வரப்பட்டவுடன் கைதிகள் அணியும் வெள்ளை டிரெளசரும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டது. அந்த உடை இறுக்கமாக இருந்ததால், வேறு உடை தைக்கப்படுகிறது. அதுவரை வேட்டி, சட்டை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை கைதி என்பதால் அவருக்கு சிறை உணவே. சர்க்கரை நோய் உள்ளதால் காலை, மாலையில் அவருக்கு சப்பாத்தி வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சையும் மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம்.
ராஜகோபாலுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் அவர்கள் வைக்கப்பட்டுள்ள பிளாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.