For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமண ஓட்டுக்களை குறி வைக்கும் எஸ்.வி.சேகர்-அதிமுகவிலிருந்து விலகுகிறார்

By Sridhar L
Google Oneindia Tamil News

S Ve Shekher
சென்னை: நடிகர் எஸ்வி சேகர் தனது சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலிருந்தும் விலகுகிறார்.

அதிமுகவில் ஒதுக்கப்பட்டுள்ள சேகர் சமீபகாலமாக தந்து வரும் பேட்டிகளில் அக் கட்சியின் தலைமையை சீண்டும் வகையில் பேசி வருவதோடு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் தாக்கி வருகிறார்.

ஜெயலலிதா தான் என்னை கட்சிக்குள் கொண்டு வந்தார். அவருக்குத் தான் பணிய முடியும், சசிகலாவுக்கு எல்லாம் பணிந்து நடக்க முடியாது என்று கூறி வரும் அவர் சமீபத்தில் தென்னக பிராமணர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தொடங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கும் சேகர் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கோரி வருகிறார். பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கருத்துத் தெரிவி்த்த துக்ளக் சோ மீதும் சமீபத்தில் சேகர் பாய்ந்தார்.

பிராமணர்களுக்கு சோ என்ன செய்திருக்கிறார் என்று கேட்ட சேகர், தந்தை பெரியாரே பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார். சமூக நீதியை எட்ட அதுவே ஒரே வழி.

பெரியாரின் கொள்கைப்படி ஒவ்வொரு ஜாதியிலும் தலைக்கு ஏற்ப வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் 7 சதவீதத்துக்கும் மேல் பிராமணர்கள் வாழ்கிறார்கள் என்றார்.

தமிழகத்தில் 30 லட்சம் பிராமணர்கள் வசிக்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டுவதும், அவர்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தருவதுமே தனது திட்டம் என்று கூறும் சேகர் 60 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நி்ர்ணயிக்கும் சக்தியாக இந்த சமூகம் திகழ்வதாகக் கூறுகிறார்.

இந் நிலையில் அதிமுகவை விட்டு விலகப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ள அவர் கூறுகையில், ஜெயலலிதாவுடனான எனது தொடர்பு துண்டிக்கப்பட்டு 2 வருடமாகிவிட்டது. என்னை கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை.

வரும் வியாழக்கிழமை முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறேன். பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு மனு கொடுக்கவுள்ளேன்.

பிராமணர்களுக்கும் இலவச டிவி, மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்று கோரவுள்ளேன்.

சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதிக்கு நான் விருப்ப மனு கொடுக்காமல், பணம் கட்டாமலேயே எனக்கு சீட் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் நடந்த நாடராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக தோற்றது. ஆனால், மயிலாப்பூரில் நான் எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றாலும், என் முகத்துக்காக மக்கள் ஓட்டுப்போட்டதும் வெற்றிக்கு காரணம் ஆகும்.

இப்போது அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்து உள்ளேன். அடுத்த மாதம் மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் மக்களுக்கு என் நிலைமையை சொல்லிவிட்டு, ஜெயலலிதாவுக்கு என் ராஜினாமா கடிதத்தை அனுப்புவேன் என்ற அவரிடம், திமுகவில் சேருவீர்களா என்று கேட்டதற்கு,

என்னைப் பொறுத்தவரை ஒரு கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு முன் இன்னொரு கட்சியில் சேருவது என்ற அவசர முடிவு எடுக்கும் அளவுக்கு என் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளோ, கிரிமினல் வழக்குகளோ இல்லை என்றார்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிடமே கேட்டிருக்கலாமே. ஏன் கேட்கவில்லை? என்ற கேள்விக்கு பதிலளித்த சேகர்,

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை முதல்வர் கருணாநிதியால் மட்டுமே வழங்க முடியும். தமிழகத்தை சமூக நீதி மாநிலமாக மாற்றியவர் டாக்டர் கலைஞர். அந்த சமூக நீதி பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் முழுமை அடையும் என்பதை கலைஞர் உணர்வார். உணர்ந்து இருக்கிறார். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழு என்று ஒரு பழமொழி இருக்கிறது அதை நான் நம்புகிறேன்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக உங்களை தாக்கி, சேலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு்ள்ளதே என்று கேட்டதற்கு,
போஸ்டர் ஒட்டியவர்கள், பிராமணர்களுக்கான இட ஒதுக்கீட்டு பலன்களை தங்கள் பிள்ளைகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிப்பார்களா என்று மட்டும் கேட்க விரும்புகிறேன் என்றார்.

சேகரின் கோரிக்கையை ஏற்று பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆராய முதல்வர் கருணாநிதி கமிட்டி அமைக்கலாம் என்கிறார்கள்.

இதற்கிடையே தமிழ்நாடு பிராமணர்கள் சங்கமான தாம்ப்ராஸ் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. வழக்கமாக பாஜகவை ஆதரிக்கும் இந்த அமைப்பு இம்முறை இட ஒதுக்கீடு விஷயத்தில் சேகரின் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பலனைப் பொறுத்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X