For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக-கர்நாடக எல்லையில் இரட்டை ஓட்டு!

By Sridhar L
Google Oneindia Tamil News

தர்மபுரி: தமிழக, கர்நாடக எல்லைப் பகுதி கிராமங்களில் வசிப்போர், இரு மாநிலங்களிலும் ஓட்டளிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.

எல்லைப் புற கிராமங்களில் உள்ள பலருக்கும் இரு மாநிலங்களிலும் வாக்குரிமை உள்ளது. இரு மாநிலங்களிலும் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவை உள்ளன.

ஓகனேக்கல், ஊத்துமலை, பன்னவாடி, சின்னபனலூர், மருகோட்டை, செங்கப்பட்டை, ஆலம்பாடி, ஆத்தூர், கோபிநத்தம், தேங்காய்செம்பு உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போர் இரு மாநிலங்களிலும் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 400 வாக்காளர்களும், கர்நாடகத்தில் 800 வாக்காளர்களும் இரு மாநிலங்களிலும் வாக்குரிமை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் உள்ள சில எல்லையோர கிராம மக்கள், தமிழக சட்டசபைக்கு கடந்த முறை தேர்தல் நடந்தபோது மேட்டூர் தொகுதியில் வாக்களித்துள்ளனர். சிலர் பெண்ணாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி கிராமத்தில் வாக்களித்துள்ளனர்.

ஆனால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம், இவர்களிடம் முறைப்படியான அனைத்து ஆவணங்களும் உள்ளதால்.

இந்த வனப்பகுதி கிராம மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடிதான். இதுதவிர வனப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

தேர்தலின்போது வாக்குச் சாவடியில் வைக்கப்படும் அழியாத மையை எப்படியாவது அழித்து விட்டு இரு மாநிலங்களிலும் ஓட்டுப் போட்டு விடுகின்றனர்.

கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் எம்.பி தொகுதிக்கு ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல தமிழகத்தில் தர்மபுரி தொகுதிக்கு மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரு தொகுதிகளிலும் இவர்கள் ஓட்டளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இரு வாக்குப் பதிவுக்கும் இடையே 12 நாள் இடைவெளி இருப்பதால் தாராளமாக இரு தொகுதிகளிலும் வாக்களிக்கும் வாய்ப்புள் உள்ளன.

ஆனால் இந்த முறை இப்படி இரட்டை வாக்களிப்பதைத் தடுக்க தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வனப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட வாக்குப்பதிவு மையங்களில் வீடியோ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் எல்லைப் பகுதிகளில் இரட்டை வாக்குப் பதிவைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக யாராவது புகார் கொடுத்தால் உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம அளவிலான அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுதொடர்பாக வாக்காளர்களை எச்சரிக்கும் வகையில் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்படும் என்றார் அமுதா.

இதேபோல கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X