கூட்டணி: தந்தையுடன் மோதல்?-அன்புமணி மறுப்பு
சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக எனது தந்தையுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில்தான் பாமக இடம் பெற வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தார் அன்புமணி.
ஆனால் டாக்டர் ராமதாஸ், காடு வெட்டி குரு உள்ளிட்டோர் அதிமுகவுடன் சேர விரும்பினர். குறிப்பாக காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கண்டிப்பாக அதிமுகவுடன் தான் சேர வேண்டும். இல்லாவிட்டால், கட்சித் தொண்டர்கள் சாதகமாக செயல்படுவார்கள் என கூற முடியாது என எச்சரிக்கை கலந்த குரலில் ராமதாஸிடம் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து அதிமுகவுடன் சேரும் முடிவுக்கு ராமதாஸ் வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதை அன்புமணி மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுக்குழு கூடுகிறது. அங்கு வாக்கெடுப்பு நடத்தவுள்ளோம். கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்கள் வாக்களித்து, யாருக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அவர்களுடன் அணி சேருவோம் என்றார்.
அப்போது நிருபர்கள், கூட்டணி தொடர்பாக உங்களுக்கும் தந்தைக்கும் மோதலாமே என்று கேட்டபோது, இது தவறான தகவல், கூட்டணி தொடர்பாக எனக்கும், தந்தைக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார் அன்புமணி.
பாமக இருக்குமிடமே வெற்றிக் கூட்டணி:
பாமக பொதுக் குழுவில் அதிமுக கூட்டணி என்ற நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். நமது கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதை செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் எப்போதும் வெற்றிக் கூட்டணியில்தான் இருப்பார். இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்.
5 ஆண்டுகாலம் மந்திரி பதவியில் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் எந்த சுகாதாரத்துறை அமைச்சரும் செய்யாததை 4 ஆண்டுகளில் நீங்கள் செய்து காட்டி உள்ளீர்கள் என்று பிரதமரே பாராட்டினார்.
கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பான ஆதரவை தந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் சேவைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ செல்லமாட்டேன் என்று சபதம் எடுத்து அதன்படி நடந்து வருகிறார்.
நான் அவரது வாரிசு, கடந்த முறை எனக்கு பதவி அளித்தபோது கூட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் வற்புறுத்தலால்தான் மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டேன்.
உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதை நன்றாக பயன்படுத்திக் கொள் என்று டாக்டர் ராமதாசும் கூறினார். அவரது கட்டளையின்படி சிறப்பாக பணிபுரிந்துள்ளேன் என்றார்.
வித்தியாசமான தலைவர் ராமதாஸ்-மணி:
கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், டாக்டர் ராமதாஸ் எதைக் செய்தாலும் வித்தியாசமாக செய்யக்கூடியவர் என்பது இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அடுத்தகட்டமாக நாம் இடம் பெறப்போகும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.
நாம் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் தோழமை கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். நாம் இடம்பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications