ராக்கெட்-வ.கொரியாவுக்கு தெ.கொரியா எச்சரிக்கை
சியோல்: வட கொரியா புதிய ராக்கெட் ஒன்றை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென் கொரியா இதன்மூலம் வட கிழக்கு ஆசியாவில் நிலவும் அமைதி சீர்குலைந்துவிடும் என கூறியுள்ளது.
வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திட்டத்தை தயார் செய்து வந்தது. இதன் காரணமாக வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே ஆயுத போட்டி உருவாகி, அங்கு அமைதி குலைந்துவிடும் என அச்சம் கொண்ட ஐநா சபை, வட கொரியா ஏவுகணை சோதனை நடத்த கடந்த 2006ம் ஆண்டு தடை விதித்தது.
இந்நிலையில் வட கொரியா வரும் ஏப்ரல் 4 அல்லது 8ம் தேதிக்குள் தாங்கள் விண்வெளிக்கு தகவல் தொடர்பு செயற்கை கோள் ஒன்றை அனுப்ப போவதாக கூறியுள்ளது.
செயற்கை கோள் ஏவுவதும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை செய்வது என இரண்டும் கிட்டதட்ட ஒன்று தான் என்பதால், வட கொரியா இப்படி மாற்று வழி மூலம் ஏவுகணை சோதனை செய்ய முயற்சிப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து தென் கொரிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வான் டே ஜே கூறுகையில், வட கொரியா தங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை புறக்கணித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இது வடகிழக்கு ஆசியா மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை சீர்குலைத்துவிடும். இதனால் வட கொரியா தனது சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறுகையில், வட கொரியா ஏவுகணை சோதனைக்கு சமமான சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவு அபாயகரமானது என்றார்.
இந்நிலையில் வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் கொரியா தனது கூட்டு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு எங்களது முன்னேற்றத்தை தடுக்க பார்க்கிறது. விண்வெளி என்பது ஒரு சில நாட்டுகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றார்.