பிரச்சாரம்-விபத்தில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்!
அவரது கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் காரில் வந்த நடிகர்கள் ராஜீவ் கனகலா, சீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
கம்மம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நல்கொண்டாவின் சூர்யாபேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
காயமடைந்த அனைவரையும், சூர்யாபேட் லைப்லைன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தேவையான அவசர அறுவைச் சிகிச்சைகளையும் செய்துள்ளனர்.
ஜூனியர் என்டிஆருக்கு மார்பு, வலது கண், நெற்றி, தலைப்பகுதி, தோள்பட்டை, கைகள் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களுக்கு அவர் முழுமையான சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தாக வேண்டும் என்று நிருபர்களிடம் தெரிவித்தனர் மருத்துவர்கள்.
தகவலறிந்ததும், ஜூனியர் என்டிஆரின் தந்தையும் என்டிஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, சித்தப்பாக்கள் பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர்.
ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கலை ஆதரித்து சாலையோர பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார் ஜூனியர் என்டிஆர். அவலர் போகுமிடமெல்லாம் பெரும் மக்கள் வெள்ளம் கூடியது.
இன்று தெலுங்கு புதுவருடப் பிறப்பு என்பதால், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனியர் என்டிஆர்.
தீவிர பிரச்சாரத்தால் அவர் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டதால், வண்டியை ஓட்ட வேண்டாம் என கம்மம் தொகுதி வேட்பாளர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதையும் மீறி, தானே ஓட்டிக் கொண்டு போவதாகக் கூறிவிட்டாராம் என்டிஆர்.
மேலும் தனது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வம்சி மோகனுக்கு கட்சியில் எம்பி டிக்கெட் மறுக்கப்பட்டதால் மனச் சோர்வு அடைந்திருந்தாராம்.