ஜெ-ராமதாஸ் சந்திப்பு: பாமகவுக்கு 7 லோக்சபா, 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் இன்று முறைப்படி இணைந்தது பாமக. இன்று காலை பத்தரை மணியளவில் போயஸ் தோட்டம் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஜெயலலிதாவை சந்தித்தார்.
அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் சென்றனர். அவர்களை ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
வீட்டு வாசலில் நின்று ராமதாஸை வரவேற்று அழைத்துச் சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்தார் ராமதாஸ். அதிமுக கூட்டணிக்கு வர பாமக முடிவெடுத்ததற்கு ராமதாஸுக்கு நன்றி கூறிக் கொண்டார் ஜெயலலிதா.
பின்னர் இரு தலைவர்களும் உள்ளே சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஜெயலலிதாவும், ராமதாஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் என கூட்டாக இருவரும் அறிவித்தனர். இவை தவிர, 1 மாநிலங்களைத் தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒரு உடன்பாட்டிலும் இருவரும் கையெழுத்திட்டு அதையும் இருவரும் வெளியிட்டனர். இதையடுத்து ராமதாஸை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
தொகுதிகளை அதிமுக தான் அறிவிக்கும்:
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாமக தலைவர் மணி, எங்கள் பொதுக் குழுவில் அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவான உடனேயே அதிமுக தலைமைக் கழகத்தி்ல் எங்களுக்கான 7 தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொகுதிகள் சுமூகமாக அடையாளம் காணப்பட்டதையடுத்து இன்று உடன்பாடு எட்டப்பட்டது.
எங்களுக்கான தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அதிமுக தலைமை அறிவிக்கும் என்றார். இதையடுத்து சிறிது நேரத்தில் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார்.
அங்கே ராஜினாமா.. இங்கே உடன்பாடு:
நேற்று முன்தினமே ஜெயலலிதாவை டாக்டர் ராமதாஸ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அன்புமணி மற்றும் வேலு ஆகியோர் பதவி விலகிய பின்னர் வந்து சந்திக்கவும் என ஜெயலலிதா தரப்பிலிருந்து கூறப்பட்டதால், ராமதாஸ் உடனடியாக ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.
ஜெயலலிதாவின் நிபந்தனையையடுத்து பிரதமரை சந்திக்க அன்புமணியும், வேலுவும் அப்பாயிண்ட்மெண்ட் கோரினர். அவர்களுக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் நேற்றே டெல்லி விரைந்தர். இதையடுத்தே ராமதாசுக்கு இன்று ஜெயலலிதாவை சந்திக்க அதிமுக தரப்பு நேரம் ஒதுக்கியது.
அன்புமணியும் வேலுவும் இன்று பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை தருகின்றனர்.
வேலு நேற்றே ரயில் அதிகாரிகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.