வருண் காந்தி மீது மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு
வருண் காந்தி கோர்ட்டுக்கு வந்து ஆஜராகும் நாடகம் நேற்று அரங்கேற்றப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பாஜகவினர் திரண்டு வந்தனர்.
கோர்ட்டுக்கு வெளியே அவர்கள் பெரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதேபோல, வருண் காந்தியை சிறைக்குக் கொண்டு சென்றபோதும் அவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
சிறைக்கு வெளியே அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கும்பலைக் கலைத்தனர்.
இந்த வன்முறையில் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், வருண் காந்தி மீது, கலவரத்தைத் தூண்டியதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். வருண் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
மேனகா புகாருக்கு மறுப்பு ..
இதற்கிடையே, முஸ்லீம் காவல்துறை அதிகாரி ஒருவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதை பிலிபித் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
மேனகா காந்தி குற்றம் காட்டும் காவல்துறை அதிகாரியான பர்வேஸ் மியான், நேற்று பணியிலேயே இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
தற்போது பிலிபித்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.