திமுக -21, காங்.-16, வி.சி-2, முஸ்லீம் லீக் 1 தொகுதிகளில் போட்டி
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் நேற்று இரவு ஏழே முக்கால் மணிக்கு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் வரவேற்றனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் சென்றனர்.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் வந்தனர்.
1 மணி நேரம் பேச்சுவார்த்தை ...
பின்னர் முதல்வர் கருணாநிதி எட்டரை மணி வாக்கில் அங்கு வந்தார். இதைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொகுதிகள் பங்கீடு சுமூகமாக முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்து தொகுதிப் பங்கீட்டை விவரித்தார்.
செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.
அதன்படி தி.மு.க. 21 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றது. காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வந்தது.
2 நாளில் தொகுதிகள் விவரம் ...
எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியைச் சேர்த்து காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்.குக்கு 6 தொகுதிகள் கூடுதல் ...
கடந்த தேர்தலில் திமுக 16 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை பாமக, இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியில் இல்லாததால், 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி கடந்த முறை 10 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 6 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.
அதேபோல பாமக கூட்டணியில் இருந்திருந்தால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதிதான் கிடைத்திருக்கும். ஆனால் அது இல்லாததால் கூடுதலாக ஒரு தொகுதி கிடைத்து 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதில் ஒன்று சிதம்பரம் என்று உறுதியாகத் தெரிகிறது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு சீட் கிடைத்துள்ளது. கடந்த முறையும் ஒரு சீட்டில் அந்தக் கட்சி போட்டியிட்டது.
வெளியேறுகிறது மனித நேய மக்கள் கட்சி ...
அதேசமயம், தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சிக்கு ஏகப்பட்ட தொகுதிகளைக் கேட்டு வந்தது. ஆனால் கருணாநிதி அதற்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே அக்கட்சி நேற்றைய இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று தெரிகிறது. அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஏப். 2ல் திமுக நேர்காணல்..
தொகுதி உடன்பாடு வெற்றிகரமாக முடிந்து விட்டதால், திமுக தனது நேர்காணலை நடத்தவுள்ளது.
ஏப்ரல் 2ம் தேதி முதல் தனது வேட்பாளர்களிடம் நேர்காணலை நடத்தவுள்ளது திமுக.