விலகிச் சென்றவர்கள் தேர்தலுக்குப் பின் வருவார்கள் - ஆசாத்
சென்னை: தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் தங்களது முடிவுக்காக வருந்துவார்கள், மீண்டும் காங்கிரஸை நாடி வருவார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வந்திருந்த குலாம் நபி ஆசாத் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இப்போது பா.ம.க. இல்லை என்றாலும் மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமையும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த கூட்டணி மத்தியில் எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
இது பாராளுமன்ற தேர்தல், எனவே அவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேர்தல் முடிவுக்கு பின்னர் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்.
விஜயகாந்தைப் பற்றி எனக்கு தெரியாது. இப்போது இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு சிறப்பாக முடிந்துள்ளது.
தொகுதி உடன்பாடு எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது. இருதரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த 5 வருட காலமாக நாங்கள் இருதரப்பினரும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணி மிகவும் சிறப்பாக உள்ளது.
சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் தலைமையில் நாட்டில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
எனவே இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் பெறும். 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். கடந்த காலத்தில் மக்களுக்கு செய்ததைவிட மேலும் அதிகமாக செய்வோம் என்றார் ஆசாத்.