லாகூர் தாக்குதல்-22 பேர் பலி, தீவிரவாதிகள் கைது
லாகூர்: லாகூர் போலீஸ் அகாடமி கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாகவும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பல போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அரசு, பாகிஸ்தானில் வட மேற்கு எல்லை பகுதியில் இருக்கும் தாலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்களை முற்றிலுமாக ஒழிக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
இதற்கு ஓரளவு தலையசைக்கும் பாகிஸ்தான் அரசு மீது இந்த தீவிரவாத கும்பல் கடும் கோபத்தில் இருப்பதால் தொடர்ந்து பாகிஸ்தானில் வெறியாட்டம் நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் உள்ள மனவன் போலீஸ் அகாடமியில் இன்று காலை 7.30 மணிக்கு தீவிரவாதிகள் படுபயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல போலீசார்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்து சென்றன.
பலர் அந்த இடத்தில் பிணமாக செத்து விழுந்தனர். கால்களில் அடிபட்ட சில போலீசார் கைகளை தரையில் இழுத்து கொண்டு தவழ்ந்து சென்றனர்.
போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாக தெரிகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க போலீசார், துணை ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து லாகூர் போலீஸ் அதிகாரி சையத் அகமது மொபின் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில்,
இங்கு பெரும் பீதி நிலவுகிறது. உள்ளே எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. அவர்களில் எத்தனை கெல்லப்பட்டனர். எத்தனை பேர் பக்கத்தில் உள்ள கட்டிடங்களில் மறைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. இதில் 8 போலீசார் வரை பலியாகி இருப்பார்கள் என்றார்.
லாகூர் தலைமை போலீஸ் அதிகாரி ஹபிபூர் ரஹ்மான் கூறுகையில், 6 அல்லது 7 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேப்படுகிறோம். துணை ராணுவத்தின் உதவியை கேட்டுள்ளோம் என்றார்.
மேலும் 15 முதல் 20 தீவிரவாதிகள் உள்ளே பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. போலீஸ் அகாடமிக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்ற கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
தீவிரவாதிகள் கைது...
இந்த பயங்கர தாக்குதலில் 22 பேர் பலியானார்கள் என்றும், சுமார் 800 பேர் வரை பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படடது. இந்நிலையில் போலீசார் வெற்றிகரமாக தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளனர். சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி ஒருவன் போலீஸ் வாகனம் ஒன்றில் ஏறிக்கொண்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினர் அவனை கைது செய்தனர்.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், அவனிடம் சில வெடிகுண்டுகளும், துப்பாக்கி இருந்தது. தாடி வைத்திருந்த அவன் கிழக்கு ஈரானில் பேசப்படும் பாஸ்டோ மொழியில் பேசினான் என்றார் அவர்