வாஜ்பாய் எங்கள் வீட்டு பிள்ளை- பல்ராம்பூர் மக்கள்
பல்ராம்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை முதல் முறையாக மக்களவைக்கு அனுப்பி வைத்த பல்ராம்பூர் தொகுதி மக்கள் இன்னும் அவரது முதல் தேர்தல் வெற்றியை நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 1957ம் ஆண்டு தனது 33வது வயதில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உபியில் உள்ள லக்னெள, மதுரா மற்றும் பல்ராம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். இது தான் அவர் சந்தித்த முதல் தேர்தல்.
லக்னெள மற்றும் மதுரா தொகுதியில் அவருக்கு டிபாசிட் கூட கிடைக்கவில்லை என்றாலும் பாரதிய ஜனசங்கம் சார்பில் போட்டியிட்ட அவரை பல்ராம்பூர் தொகுதி மக்கள் கைவிடவில்லை. அங்கு அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஹைதர் உசைனை 10 ஆயிரம் ஓட்டு வித்தியாச்ததில் தோற்கடித்து, முதல் முறையாக மக்களவைக்கு சென்றார்.
ஆனால், 1962ல் ஜவஹர்லால் நேரு, புகழ் பெற்ற சினிமா ஸ்டாராக விளங்கிய பிரபல இந்தி நடிகர் பால்ராஜ் சஹானியின் செல்வாக்கை பயன்படுத்து பல்ராம்பூரில் வாஜ்பாயை வீழ்த்தினார்.
இதன்மூலம் சினிமா நட்சத்திரத்தின் மூலம் தோல்வியடைந்த முதல் பெரிய வேட்பாளர் என்ற பெயரை வாஜ்பாய் பெற்றார். இதன் பின்னர் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பல்ராம்பூர் தொகுதி இல்லாமல் போய்விட்டது.
வாஜ்பாயும் தனது தொகுதியை லக்னெளவுக்கு மாற்றி, கடைசியாக நடந்த 5 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். தற்போது அவர் உடல்நிலை காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத போதிலும் அவரை பல்ராம்பூர் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இது குறித்து 82 வயதான மதன் மோகன் சர்மா என்னும் பல்ராம்பூர் வாசி கூறுகையில்,
வாஜ்பாய் இன்னும் எங்கள் நினைவில் இருக்கிறார். என்னை போன்ற முதியவர்கள் இளைஞர்களுக்கு அந்த காலத்து நினைவுகளை கதைகளாக கூறி வருகிறோம்.
அவர் பேச்சை கேட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள். அவரை விரும்பாதவர்கள் கூட அவரது பேச்சை கேட்க கூட்டம் கூடிவிடுவார்கள். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின் இரவு யாராவது தேர்தல் பேசினால், வீட்டுக்கு போய் சாப்பாட்டை பாரு.
அரசியலை அடுத்த நாள் பார்த்து கொள்ளலாம் என கூறிவிடுவார். அவரை பல்ராம்பூர் மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி வருகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications